திருச்செந்தூா் கடல் பகுதியில் பக்தர்கள் குளித்தால் தோல் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனமாக இருக்குமாறு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘திருச்செந்தூர் கோவில் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றது. இதனால் பக்தர்களுக்கு தோல் அலர்ஜி மற்றும் ஊறல் ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்த வகை மீன்கள் தமிழ் மாதம் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கடற்கரையில் காணப்படும். கண்ணாடி போன்று இந்த மீன்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால் அதிக விஷத்தன்மை கொண்டதாகும்.
கடலில் குளிக்கும் பக்தர்கள் மேல் பட்டதும் ஊறல் ஏற்படுகிறது. சில சமயம் ஊறல் ஏற்படுவதோடு தீப்பட்டது போல் தோல் உரிந்து விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதனால் பக்தர்கள் கவனமாக இருக்குமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.