தமிழக ஆளுநரும் அரசும் ஒன்றாகிவிட்டனர்: ஜெயக்குமார்!

பிரதமரை முதல்வர் சந்தித்துவிட்டு வந்த பிறகு ஆளுநருடன் திமுக அனுசரித்து செல்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராயபுரம் ராம்நாயக்கன் தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர்களே மாறி,மாறி பேசி வருகிறார்கள். மழைக் காலத்தில் யாராவது மழைநீர் வடிகால்வாய்பணிகளை மேற்கொள்வார்களா? வேளச்சேரி பாலத்தில், மக்கள் பயந்துபோய் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த ஆட்சி மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததையே இது காட்டுகிறது.

அரசைப் பொறுத்தவரை வேலைபார்ப்பது போல காட்டிக் கொள்கிறார்கள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும், முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலும் இடுப்பளவு மழைநீர் தேங்கி இருந்ததாக மக்கள் கூறு கின்றனர்.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை முழுமையாக செய்யவில்லை. வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் ஆந்திராவை நோக்கிச் சென்றுவிட்டது. அதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டும் மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது. அதனால் திமுக அரசு தப்பியது. இல்லாவிட்டால் இந்த அரசின் சாயம் வெளுத்திருக்கும்.

தமிழக ஆளுநரும் அரசும் ஒன்றாகிவிட்டனர். பிரதமரை முதல்வர் சந்தித்துவிட்டு வந்த பிறகு ஆளுநருடன் திமுக அனுசரித்து செல்கிறது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

RELATED ARTICLES

Recent News