இலங்கை கல்முனை வடக்கு பிரதேச செயலக மக்கள் பிரச்சனைக்களுக்கு உடனடி தீர்வு பெற்றுத்தருமாறு மக்கள் ஆர்பாட்டம் நடத்தியதால் மட்டக்களப்பு – கல்முனை பிரதான சாலையில் 7 மணி நேரம் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டு பதற்ற நிலை ஏற்பட்டது.
மேலும், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை பூட்டி அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக நடைபெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் அதற்கான உரிய தீர்வு கோரியும் தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு – கல்முனை வீதி தடைப்பட்டதால் வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதே வேளை 7 மணிநேரம் கல்முனை நகரம் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் நடைபெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் 7 மணிநேரம் கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன் நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மட்டும் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன.
அத்துடன் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன? என பல கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர்.
பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் போலீசாரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.
அதுவரை சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்து.
மேலும் வழக்கத்திற்கு மாறாக இன்று பெரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.