தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது.
இந்நிலையில் தஞ்சையில் ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நூதன விழிப்புணர்வு போட்டியை அறிவித்தது.
தஞ்சையில் பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் அணிந்து வரக்கூடிய நபர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையின்றி கூறினால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவிப்புக்கு ஆர்வமுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் வந்து தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடி 2 லிட்டர் பெட்ரோல் தங்களது வண்டியில் நிரப்பிச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் பலரும் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக கூறி மீண்டும் மனப்பாடம் செய்து சரியாக சொல்ல முற்பட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக கூறிய 25 நபர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது.