வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (அக்.15) இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.
சென்னை விமான நிலையத்தில் கன மழை, சூறைக்காற்று போன்றவைகளால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அனுப்பி வரும், வானிலை அறிக்கையின் அடிப்படையில், விமான சேவைகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து, ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக, இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், இன்று சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும், 4 வருகை விமானங்களும், மொத்தம் 8 விமானங்கள் இதுவரையில், ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளன.