இளைஞரை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்: பாஜக நிர்வாகி மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கைது!

வழி விடுவதில் தகராறு போலீஸ் கண் முன்னே ஓட்டல் அதிபரை‌ ஓட ஓட விரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மற்றும் பாஜக நிர்வாகி அவரது நண்பர்கள் போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஜார்ஜ் டவுன் தாயப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (36). இவர் ஓஎம்ஆர் பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று (ஏப்.2) மாலை மணிவண்ணன் தனது தோழியுடன் காரில் மெரினா லூப் சாலை வழியாக ஓஎம்ஆர்-ல் உள்ள தனது ஓட்டலுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது பட்டினப்பாக்கம் லூப் சாலை சந்திப்பில் முன்னாள் சென்ற சிவப்பு நிற கார் நீண்ட நேரமாக வழிவிடாமல் சாலையில் குறுக்கே அங்கும், இங்கும் சென்று திடிரென பிரேக் போட்டு நின்றுள்ளது.

இதில் சுதாரித்துக் கொண்ட மணிவண்ணன் பிரேக் பிடித்து தனது காரை‌ நிறுத்தி விபத்தை தவிர்ததுடன் முன்னாள் சென்ற கார் ஓட்டுநரிடம்
ஏன் திடிரென நிறுத்தினீர்கள் எனக்கேட்டுள்ளார்.

அப்போது காரில் பயணம் செய்த ஐந்து பேர் காரில் இருந்து இறங்கி வந்து தோழி கண் எதிரே மணிவண்ணனை தாக்கியுள்ளனர்.

பின்னர் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொது மக்கள் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர், காவலர் ஓடி வந்து தாக்குதலை தடுக்க முயன்றனர்.
இதையடுத்து, மது போதையில் இருந்த அந்த கும்பலில் ஒருவன் தானும் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் லோகப்பிரகாசம் என கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் போதை ஆசாமிகள் 5 பேரும் போலீசார் கண் முன்னே மணிவண்ணனின் சட்டையை கிழித்தெறிந்து நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தியதுடன் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை வேடிக்கை பார்த்த போக்குவரத்து காவலர்களிடம் பொதுமக்கள் மணிவண்ணனை காப்பாற்றுமாறு கேட்டும் போலீசார் அதற்கு செவிசாய்க்காமல் தாக்குதல் நடத்துவதை பின் தொடர்ந்து சென்று வேடிக்கை பார்த்ததுடன் போக்குவரத்து காவலர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உடனே பொது மக்கள் அந்த போதை கும்பலிடம் இருந்து மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட மணிவண்ணன் இது குறித்து பட்டிணம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த காவலர் கோபி, சுடலையாண்டி, மற்றும் பாஜக பொறுப்பில் இருக்கக்கூடிய கார்த்திக் ராஜா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News