ஆளுநரின் வாழ்க்கைமுறை எல்லோருக்கும் தெரியும். மிக வசதியான வாழ்க்கை முறை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நான் மக்கள் ஆளுநராக தான் 2 மாநிலங்களிலும் இருந்தேன். எனவே, இன்னும் தீவிரமான மக்கள்பணி செய்ய வேண்டும் என்பதற்காக இப்போது ஆளுநர் பதவியை மனமுவந்து ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறேன். தெலங்கானா, புதுச்சேரி மாநில மக்கள் என் மீது காட்டிய அன்புக்குநான் எப்பொதும் நன்றி உடையவளாக இருப்பேன். எனக்கு ஆளுநராக பதவியை வழங்கிய குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எனது நன்றி. என்னுடைய ராஜினாமா முதலில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ராஜினாமா ஏற்றுக்கொள்ளப் பட்டால், நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எனது வருங்கால திட்டம் குறித்தும் எனது பதிலை கூறுகிறேன். ஆளுநர்பதவியில் இருந்த போது எனது அரசியல் பயணம் எதுவும் தடைபடவில்லை. மாறாக, எனக்கு இன்னும்நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது.
இப்போது, நான் நேரடியாக, நேர்மையான அரசியலுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஏற்கெனவே மக்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். எனவே, நிச்சயம் மக்களின் ஆதரவு எனக்கு இன்னும் அதிகமாக இருக்கும்.
புதுச்சேரியில் இன்னும் 2 வருடமும், தெலங்கானாவில் 6 மாதமும் எனது பதவிக்காலம் இருக்கிறது. ஆளுநரின் வாழ்க்கைமுறை எல்லோருக்கும் தெரியும். மிக வசதியான வாழ்க்கை முறை. இத்தனை வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு மீண்டும் மக்களுக்காக வருகிறேன் என்றால், மக்கள் என்அன்பை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். எனக்கு ஆண்டவன் அருளும் கிடைத்திருக்கிறது. ஆண்டுகொண்டிருப்பவரின் அனுமதியும் கிடைத்திருக்கிறது. இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.