திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் ஜெயபிரகாஷ் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவியும், மோகன்ராஜ் என்ற நான்கு வயது குழந்தையும், இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தையும் உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, குடி போதையில் இருந்த மணிகண்டன் குழந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மணிகண்டனின் மனைவி சரோஜினி அளித்த புகாரின் பேரில் மணிகண்டனை கைது செய்த பல்லடம் போலீசார் நீதிபதி உத்தரவின் பெயரில் பல்லடம் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மணிகண்டன் இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த உடனேயே குழந்தையை விற்க முயன்றதாகவும் காவல் நிலையத்தில் புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தையை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்படவுள்ளது.