கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து கலைஞர் வரலாறு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார், கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள் என்ற பெயரில் இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கபட்டுள்ளது. இதில் கலைஞரை நினைவு கூறும் வகையில் அவரது அரசியல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் புகைபடமாக அமைக்கபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கலைஞரின் வரலாற்று நினைவு குறும்படத்தினை வெளியிட்டு பார்வையிட்டார்.
அவருடன் எம்.பி-கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதனையடுத்து சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்துவது, அடுத்தடுத்து முரசொலி அலுவலகத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கு மரியாதை செலுத்துவது பின்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கு மரியாதை செலுத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னதாக கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவபடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.