நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று வெளியாகியது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஸ்டார் வேட்பாளர்களாக அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், நடிகை ராதிகா உள்ளிட்ட பலர் களம் கண்டனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 10 இடங்களில் வெற்றி பெறும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாததால் தமிழக பாஜகவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியால் மாநில தலைமையகமான கமலாலயம், பாஜக நிர்வாகிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.