தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள நவிப்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.
விருந்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவில் மட்டன் துண்டுகளும் எலும்பும் குறைவாக இருப்பதாக மணமகன் தரப்பினர் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக மணமகன் தரப்பினருக்கும் மணமகள் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டையாக மாறியது.
சண்டை மோதலாக மாறி ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது அவர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் எட்டு பேருக்கு மண்டை உடைந்தது.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி காயமடைந்தவர்களை நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த மோதல் தொடர்பாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்த காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
திருமண விருந்து நிகழ்ச்சியில் எலும்பு துண்டுக்காக ஏற்பட்ட சண்டை மோதலாக மாறி எட்டு பேர் மண்டை உடைந்து 19 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பேசு பொருளாக மாறி உள்ளது.