ஷார் மார்கெட்டில் நஷ்டம்: யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இன்ஜினியர் கைது!

தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி (70). இவரிடம் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்து சென்றார்.

அதே போல, கிழக்கு தாம்பரம், ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா (49) என்பவரிடமும் நபர் ஒருவர் ஐந்து சவரன் தங்கச் செயினை பறித்து சென்றார்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த சேலையூர் போலீசார் ஆய்வாளர் சந்துரு குரு, உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அந்த நபர் எங்கெல்லாம் சென்றார் என்று பார்த்தபோது அதில் அவர் காமராஜபுரம், மப்பேடு, அகரம், பெருங்களத்தூர், முடிச்சூர், படப்பை என சென்று இறுதியாக மடிப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் (27) எனவும், மடிப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதும், பி.இ சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலை கிடைக்காததால் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தி நஷ்டம் ஏற்பட்டதால் யூடியூப் பார்த்து முதன் முதலாக செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புகொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News