தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக இன்று அதிகாலை முதல் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவையில் அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் முன்பாக கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. ஜமேசா முபின் என்பவர் காரை எடுத்துச் சென்று வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தியது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை கார் வெடிகுண்டு சம்பவத்தில் முகமது தாஹா, ஷேக் ஹிதாயத்துல்லா, சனோபர் அலி, முகமது அசாருதீன் உள்ளிட்ட 15 நபர்களை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவை கார் வெடிகுண்டு விபத்து தொடர்பாக இதுவரை மூன்று முறை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில் தற்போது நான்காவது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று காலை முதல் சோதனையானது நடைபெற்று வருகிறது.
சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர், 87 வது தெருவில் உள்ள ரியாஸ் அக்ரம் (68) எனவர் வீடு, திரு வி க நகர் தில்லைநாயக்கன் 5-வது தெருவில் உள்ள முகமது அப்துல்லா பாஷா என்பவரது வீடு, பல்லாவரம் சோமசுந்தரம் தெரு என சென்னையில் ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை கார் வெடிகுண்டு விபத்து தொடர்பாக பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு ஆயுத உதவி, நிதி உதவி, நிதி வசூல் மற்றும் மூளைச்சலவை செய்தல் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
முழுமையான சோதனைக்கு பிறகே கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்? யார்? என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது? என்பது குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.