சமூக வலைதளங்களில் “லைக்” மற்றும் “ஷேர்”களுக்காக இன்றைய இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகின்றனர். அந்த வகையில் இளம்பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்திலேயே காரை ஓட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நாகுலபள்ளி – சங்கரபள்ளி ரயில்வே மார்க்கத்தில் இளம்பெண் ஒருவர் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிச் சென்றுள்ளார்.
ரயில் தண்டவாளத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்த காரைக் கவனித்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாகச் சுதாரித்து அவரை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்தப் பெண் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் காரை முன்னெடுத்துச் சென்றார்.
சிறிது தூரம் சென்ற பிறகு, நாகுலபள்ளி அருகே சில உள்ளூர்வாசிகள் அவரது காரைத் தடுத்து நிறுத்த முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை மிரட்டியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் படம்பிடிக்கவே இவர் இந்த ஆபத்தான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தால் பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்த பல ரயில்களை அதிகாரிகள் பாதையிலேயே நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல மணி நேரம் ரயில் போக்குவரத்து தடைபட்டது. அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் போலீசார் தெரிவித்தனர்.