வரும் 2026-ஆம் ஆண்டுக்கான தேர்தலை எதிர்நோக்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், மும்மரமாக பணியாற்றி வருகின்றன.
அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது, திமுக கூட்டணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று தற்போதைய களநிலவரம் கூறும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி வழங்கியுள்ளார்.
அதில், இதே கூட்டணி நீடிக்குமா? அல்லது பா.ம.க. , தே.மு.தி.க ஆகிய இரண்டு கட்சிகள், கூட்டணியில் இடம்பிடிக்குமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது.
கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவ – சமூகநீதிப் பாதையில் சிறப்பாக செயல்படுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வெற்றியை வழங்குகின்றனர். இந்த வெற்றிப் பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.