கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த அமுல் கந்தசாமி அதிமுகவின் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும், வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமுல் கந்தசாமி மருத்துவ பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
https://x.com/EPSTamilNadu/status/1936380383068921956
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்.,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி.க. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
அன்புச் சகோதரர் அமுல் கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என இவ்வாறே தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.