தெலுங்கானா பெண்களுக்கு மாநில அரசு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இலவச ஆர்.டி.சி பேருந்து பயணத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கும் நடத்துனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது..
குறிப்பாக ஆதார் புதுப்பிப்பு இல்லையென்றால் நடத்துனர்கள் இலவச டிக்கெட் வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.. புதுப்பிப்பு இல்லையென்றால் டிக்கெட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நடத்துனர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில், ஆதார் அட்டை புதுப்பிப்பு இல்லையென்றால் இலவச பேருந்து டிக்கெட் வழங்க மாட்டேன் என்று கூறி ஒரு சிறு குழந்தை மற்றும் மூன்று பெண்களை ஆர்.டி.சி நடத்துனர் நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டார். சூர்யாபேட்டிலிருந்து நல்கொண்டா செல்லும் பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வீடியோவில் அப்பெண் பேசியதாவது, “சூர்யாபேட்டிலிருந்து நல்கொண்டா செல்லும் வழியில் ஆதார் அட்டை புதுப்பிப்பு இல்லையென்று நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டனர். சிறு குழந்தை இருப்பதாகக் கூட பார்க்காமல் நடுவழியில் இறக்கிவிட்டனர். இது என்ன பழக்கம், இது என்ன ஆட்சி, எங்களுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது.
லாரிகள் செல்லும் நெடுஞ்சாலையில் எங்களை ஓட்டுநரும், நடத்துனரும் இறக்கிவிட்டுச் சென்றனர். இந்த இலவச பேருந்துகளால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்” என்று அப்பெண் ஆதங்கப்பட்டார். இது தொடர்பான செய்தி இணையத்தில் வைரலானதால் ஆர்.டி.சி அதிகாரிகளை X தளத்தில் டேக் செய்தனர்.
ஆதார் புதுப்பிப்பு இல்லையென்றால் ஏன் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்… நடத்துனருக்கு அந்த நபரின் ஊர், பெயர் தானே தேவை, புதுப்பிப்பு எதற்கு..? என்று ஆர்.டி.சி எம்.டி சஜ்ஜனாரை ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்..
ஆதார் புதுப்பிப்பு செய்யாவிட்டால் பேருந்தில் ஏற்றிக்கொள்ள மாட்டார்களா? எந்த மாநிலம் என்று பார்த்தால் போதுமா? அல்லது புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று மென்மையாக சொல்லலாமே” என்று ஆர்.டி.சிக்கு நெட்டிசன்கள் ஆலோசனை வழங்கினர். இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை காண்பித்து பூஜ்ஜிய டிக்கெட்டை பெறலாம்.
ஆதார் அட்டை இல்லாத தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை காண்பித்து இலவச டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணம் செய்யலாம் என்று (TGSRTC) ஆர்.டி.சி எம்.டி சஜ்ஜனார் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.