புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வரும் நாவலர் நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும், இப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு அனுப்பி பாடம் எடுக்க நிர்பந்திப்பதை நிறுத்த கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் தலைமையில் பெற்றோர்கள் கல்வித்துறையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இணை இயக்குநர் இல்லாமல் அலுவலகத்தில் மின்விசிறி, ஏசி ஆகியவை ஓடியதாலும், அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ மற்றும் பெற்றோர்கள் இணை இயக்குநர் அலுவலகத்தின் கதவை திறந்து அறையின் உள்ளே சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். 30 நிமிடங்களுக்கு மேலாக அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் தலைமையில் பெற்றோர்கள் இந்திரா காந்தி சிக்னல் அருகே மறியலில் ஈடுபட்டதால் புதுச்சேரி, கடலூர், சென்னை இடையே 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து இணை இயக்குநர் சிவகாமி அழைத்து கல்வித்துறை வாயிலிலேயே எம்.எல்.ஏ மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் கோரிக்கைகளை உடனடியாக சரிசெய்யப்படும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறை சரிசெய்து, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சரிடம் முறையிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.