ஆள் இல்லாத வீட்டில் கைவரிசை..!! சொகுசு காரில் வந்த அந்த மர்ம கும்பல்..?

பாளையங்கோட்டையை அடுத்த அரியகுளத்தை சேர்ந்தவர் மீனாட்சி.. இவரது கணவர் ஆறுமுகம் 27 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் மற்றும் மக்களுக்கு திருமணமாகிவிட்டதால் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.. மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் மீனாட்சி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த மீனாட்சி, தனது மகள் மற்றும் மருமகனுடன் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரொக்கப்பணம் 15 ஆயிரம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகைகள், குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளை, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மீனாட்சி மற்றும் குடும்பத்தினர் பாளை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று சம்பவத்தன்று சம்பவ நேரத்தில் நடமாடியது தெரியவந்தது. ஆனால் அந்த காரின் பதிவெண் தெளிவாக தெரியவில்லை.

இதனால் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு சொகுசு காரில் வந்து கைவரிசை காட்டிச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகரின் விரிவாக்க பகுதியான ஆசிரியர் காலனி பகுதியானது பாளை தாலுகா போலீஸ் எல்லைக்குள் வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் மக்கள் நடமாட அச்சப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதனை கவனத்தில் எடுத்து அரியகுளம் விரிவாக்க பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து போலீசாரை ரோந்து சுற்றி வருவதற்கு உத்தரவிடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News