நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் சண்முகம் (37) என்பவர் உள்ளிட்ட 14 மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த 18- ந்தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லைப்பகுதியில் வலைகள் விரித்து மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீர் என சண்முகம் எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சக மீனவர்கள் சண்முகத்தை தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கிராம மீனவ பஞ்சாயத்தார்களுக்கு சகா மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேலும் ஒரு சில மீன்பிடி படகுகளுடன் மீனவர்கள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ரோந்து படகுகளும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் விழுந்து மாயமான சம்பவம் மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.