தவெக தேர்தல் பரப்புரை விவகாரம் ஐகோர்ட் அதிரடி

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை துவங்கிய அவர், செப்டம்பர் 20 ம் தேதி முதல் டிசம்பர் 20 ம் தேதி வரை ஒவ்வோரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என, தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் காவல் துறை அனுமதி வழங்குவதாகவும், அதே போல த.வெ.க.வுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரியும் கடந்த 9 மற்றும் 15 ம் தேதிகளில் ல் டிஜிபி-யிடம் கட்சி சார்பில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகளும் த.வெ.க.வுக்கு எதிராக காவல்துறை விதிப்பதாக கூறினார்.

மாவட்டங்களில் பரப்புரை முடிந்து எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும் என்றெல்லாம் காவல்துறை நிபந்தனைகள் விதிப்பதாகவும், எத்தனை வாகனங்கள் வர வேண்டும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படி சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிபதி, இது போன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது ஒன்று தானே? முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால் பொது மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும். ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். கட்சி கூட்டத்தின் போது சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையென்றால் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார்.

மேலும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உங்கள் அரசியல் கூட்டங்களுக்கு வர வேண்டாம் என கோரிக்கை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே? உங்கள் கட்சியினர் நீங்கள் தான் அறிவுரை வழங்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், த.வெ.க பரப்புரைக்கு எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படாமல், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக கூறினார். திருச்சி பரப்புரையின் போது த.வெ.க தொண்டர்களின் செயல்களை புகைப்படமாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதனை பார்த்த நீதிபதி, இவர்கள் இது போன்று உயரமான இடங்களில் ஏறி நிற்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதனை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் பொதுவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சியின் கூட்டங்களில் போது பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை கூட்டம் நடத்துபவர்கள் டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விதிமுறைகள் மற்றும் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்து தீர்ப்பு வழங்கினார்..

RELATED ARTICLES

Recent News