காதலி பேசாததால் தனது நண்பர்களுடன் காதலி வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒருவர் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் ஆதம் வயது 23 என்பவரும் திருவாரூர் மாவட்டம் புலிவலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் சௌமியா வயது 22 என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சௌமியா ஆதமுடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆதம் தற்போது தென்காசியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நள்ளிரவு ஆதம் மற்றும் அவரது நண்பர்களான பாண்டுகுடியை சேர்ந்த முகமது ராகுல் தீன் மற்றும் தென்காசியை சேர்ந்த ஹாஜ்முகமது ஆகிய மூன்று பேரும் சேர்ந்து புலிவலம் காந்தி நகரில் உள்ள சௌமியா வீட்டிற்கு வந்து தன்னிடம் பேசாதது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சௌமியாவின் அம்மாவிடம் காதலிக்கும் போது தான் வாங்கி கொடுத்த பொருட்களையும் செலவு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சௌமியாவின் அண்ணன் கோபிகிருஷ்ணன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்கிற நீதிமன்ற ஊழியரும் தட்சிணாமூர்த்தி என்கிற இரண்டு பேரும் சண்டையை தடுப்பதற்காக வந்துள்ளனர்.
அப்போது ஆதம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தியை சரமாரியாக குத்தியதில் சந்தோஷ்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஸதட்சிணாமூர்த்தி பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தோஷ்குமார் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆதம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவரது நண்பர்கள் முகமது ராகுல்தீன் ஹாஜ் முஹம்மது ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஆதமை காவல்துறையின் தேடி வருகின்றனர். காதல் பிரச்சினைக்காக கத்தியால் குத்தி நீதிமன்றம் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.