திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்தி பேசியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகனிடம் இருந்து செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருச்சி தில்லை நகர் போலீசார் கைது செய்தனர். சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.