பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பார் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் அடிதடி தகராறில் ஈடுபட்ட சிலரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி என்பது பின்னரே தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது., அதிமுக ஐ.டி விங் நிர்வாகியான பிரசாத் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதும் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், பிரசாத் ஒரு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் போதைப்பொருள்களை யாரிடம் இருந்து வாங்கினார், யாருக்கெல்லாம் விற்பனை செய்தார் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பிரதீப் என்பவர் மூலம் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த்திடம்., இன்று காலை துணை கமிஷ்னர் ஜெயசந்திரன் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவர் கொக்கைன் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் ஆதரங்களின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்..