வந்தவாசி அடுத்த சைதானிபீ தர்கா அருகே ஆடுகளுக்கு பிஸ்கட் கொடுத்து நூதன முறையில் காரில் திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்து 13,000 பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள புறவழி சாலையில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
பின்னர் காரை திறந்து பார்த்தபோது ஆட்டின் சாணங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது வேலூர் மாவட்டம் தர்ணாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் என்பதும்.,
இவர் வந்தவாசி ஐந்து கண் பாலம் சைதானிபீ தர்கா அருகே 2 ஆடுகளுக்கு பிஸ்கட்கள் கொடுத்து நூதன முறையில் திருடி வந்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் விசாரணையில் இவர் பல்வேறு இடங்களில் ஆடுகளுக்கு பிஸ்கட் கொடுத்து நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சுல்தானை கையும் களவுமாக கைது செய்து., 13,000 ரூபாய் பணம் மற்றும் ஆடுகளை திருடுவதற்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..