ஈரான் இஸ்ரேல் இடையே போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா பி2 ஸ்பிரிட் ரக விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதலை நடத்தியது. அதற்கு “ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிட்டது. மேலும் இதற்கும் ஈரான் அடிப்பணியாவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் பேரிழப்பை சந்திக்க கூடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து போர் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போர் குறித்து எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
உலகின் தலையில் மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது அணுகுண்டு
“வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்”
கலங்குகிறது உலகு
ஈரானின் அணுசக்தித் தளங்களில்
டொமாஹக் ஏவுகணைகள்வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா
வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில்
புல்லரசு ஆகிவிடும் பூமி
தான் கட்டமைத்த நாகரிகத்தைத் தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள் என்ன செய்தன..?
“போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்..”
அணுகுண்டு முட்டையிடும் அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத் திரும்பட்டும்
என இவ்வாறே அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..