கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் தனது கட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அக்டோபர் மாதம் தனது முதல் அரசியல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தி சில அரசியல் தலைவர்களை மறைமுகம் சாடினார்.
இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்., அதன் பின்னர் தனது அரசியல் பயணத்தை ரோடு ஷோவாக தொடங்கினார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் பாஜகவினரை நேரடியாக தாக்கி பேசியிருந்தார்.
அவரின் அந்த பேச்சு திமுகவினர்யிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுக மற்றும் தவெக இடையே நீயான நானா என்கிற போட்டி நிலவிவருகிறது என்று சொல்லலாம்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் திமுக அரசை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக மக்களுக்கு “நலத் திட்டங்களை அள்ளித் தரும் அரசு எனக் கூறிக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். ஆனால் அவை வெறும் வெற்று விளம்பரமாகவே போய் விடுகிறது. என விமர்சித்துள்ளார். ஆனால் திமுகவில் நடப்பதுதான் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
“கருவறை முதல் கல்லறை வரை.., அலட்சியமும் ஊழலும் மலிந்து போன, நிர்வாகத் திறனற்ற விளம்பர மாடல் ஆட்சியாகத்தான் தி.மு.க. அரசு திகழ்கிறது என்று சாடினார். மேலும் ஆண்டு முழுதும், “நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த…’ அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள், ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்டத்திலும் தொடங்கி, தலைநகர் சென்னை வரையிலும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தித் தமிழக அரசை எதிர்த்துத் தினமும் போராடிக் கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.
நெல் விவசாயிகள் வயிற்றில் நேரடியாக அடித்து, அவர்களின் வாழ்வைப் பறித்த நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்ற இறக்க, எடைபோட்டுக் கட்ட, மூட்டைகளாகப் பிரிக்க என அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு கட்டமாக விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதையும் கடந்து, வேறு வழியில்லாமல் லஞ்சமும் கொடுத்து, தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணத்தையும் கேட்டு மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

811 கோடி ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் துயர் துடைப்போம்” என்று உறுதி கொடுத்துவிட்டு, இன்று அந்த விவசாயிகளையே கண்ணீர் விட வைத்திருக்கும் கபட நாடக ஆட்சியாகத் தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கடுமையான கேள்விகளை ஆதவ் அர்ஜுனா தனது அறிக்கையின் மூலம் முன்வைத்துள்ளார்.

மேலும் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியதை சுட்டிக்காட்டி., தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுப்பதோடு, அவர்களின் குரல்வளையை நெரிக்கும் பாதகச் செயலையும் திமுக அரசு செய்வதாக கடுமையாக சாடியுள்ளார்.

உடனடியாகத் தமிழ்நாடு அரசு விவசாய விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, நெல் விவசாயிகளுக்கு உரிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும்; இனி வரும் காலங்களில் முன்பிருந்ததைப் போல், தமிழக அரசே நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும்: அதில் லஞ்சம் – ஊழல் உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெறாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும் இவ்வாறே தனது அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.