தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.
4 லட்சத்து 74 ஆயிரத்து 543 மாணவர்கள், 4 லட்சத்து 63 ஆயிரத்து 522 மாணவிகள், இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 பேர் இந்த தேர்வை எழுதியிருந்தனர்.
விடைத் தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதால், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் வெளியிடப்படும்.
இந்த இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres)அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.