திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து. அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெண்ணை காதலித்து வந்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணிடம் வீரமுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கு இடையேயான தொடர்பு அந்தப் பெண்ணின் அக்கா கணவரான தங்கராஜ் என்பவருக்கு தெரியவந்துள்ளது. தங்கராஜ் அந்தப் பெண்ணிடம் இருவருக்குமான உறவை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக தெரிய வருகிறது.
வீரமுத்து ,தங்கராஜ் ஆகிய இருவரும் மாறி மாறி சிறுமியை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதில் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் பரிசோதனை மேற்கொண்டபோது சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தனது காதலனான வீரமுத்துவை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே மனமுடைந்த சிறுமி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வீரமுத்து மற்றும் தங்கராஜ் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்னர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.