தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்கிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள், இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடித்து வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தற்போது கைதாகி இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று தெரிவித்துள்ள திருமாவளவன், கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.