Make My Trip மற்றும் Goibibo ஆகிய டிராவல் இணையதளங்கள், புதன்கிழமை காலையில் இருந்து, எக்ஸ் வலைதள வாசிகளால், விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, ‘Boycott MakeMyTrip’ மற்றும் ‘Uninstall Goibibo’ ஆகிய ஹேஷ்டேக்குகளும், இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
மேற்கண்ட இந்த நிறுவனங்கள், டிக்கெட் புக் செய்யும்போது, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திரட்டுவதாக கூறி, நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டதையடுத்து, நெட்டிசன்கள் அந்நிறுவனங்கள் மீதான தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், பாஜகவின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யாய் தொடுத்த இந்த வழக்கை, நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும், மத்திய அரசிடம் இதுகுறித்து புகார் அளிக்கவும், மனுதாரரை நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பாஜக தலைவர் மற்றும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யாய், தன்னுடைய மனுவில், “வெளிநாட்டு டிராவல் ஏஜென்ஸிஸ், சாதாரண குடிமக்களின் விபரங்களை மட்டுமின்றி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் விவரங்களை திரட்டுகின்றனர்.
சீன நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வணிகத்தை செய்து வருகின்றனர். இது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.” என்று கூறியிருந்தார்.